districts

img

பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததால் பொதுத் தேர்வு எழுத முடியாமல் ஆட்சியரிடம் மாணவர்கள் முறையீடு

தஞ்சாவூர், பிப்.15-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததால் பத்தாம் பொதுத்தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளான மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை முறையிட்டனர். பட்டுக்கோட்டை அருகேயுள்ள நடுவிக்காடு பகுதியிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 16 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 19 பேர் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.  இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சனிக்கிழமை (பிப்.15) தொடங்கிய நிலையில், அப்பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததால் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். இதனால், மாவட்ட ஆட்சிய ரகத்தில் முறையிடுவதற்காக பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வெள்ளிக்கிழமை வந்தனர். ஆனால்,  ஆட்சியர் கும்பகோணத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற வேளாண்  பட்ஜெட் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்துக்கு சென்றுவிட்ட தால், தொடர்ந்து மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மாலை வரை காத்திருந்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு சனிக்கிழமை தொடங்கப்படவுள்ள நிலையில், இதுவரை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, மாணவ, மாணவிகளைத் தனித் தேர்வர்களாக (என்.ஐ.ஓ.எஸ். மூலமாக) எழுத வைக்கிறோம் என வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு தெரிவித்தனர்.  பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாத தகவலும் வியாழக்கிழமை இரவுதான் தெரிய வந்தது. இதனிடையே, பள்ளிக்கு அங்கீ காரம் இல்லாததால், மாணவ, மாணவிகள் எட்டாம் வகுப்பில் எழுதிய பொதுத்தேர்வும் அங்கீகரிக்கப்படவில்லை. தனித் தேர்வர்களாகவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது எனக் கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவ, மாணவிகள் ஓராண்டு காலமாக தீவிரமாக முயற்சி செய்து படித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டுதான் எழுத முடியும் என்றால், எப்படி சாத்தியமாகும். இதனால், மாணவ, மாணவிகள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி, உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களாகிய எங்களுக்கும் மிகுந்த வேதனையாக இருக்கிறது. எனவே, மாணவ, மாணவிகள் சனிக்கிழமை தேர்வு எழுதுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து, மாலையில் ஆட்சியரகத்துக்கு வந்த ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் முறையிட்டனர்.  இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கயைில்,  சமச்சீர் கல்வி மூலம் நடத்தப்படும் மாநிலக் கல்வி வாரியத் தேர்வு எழுதுவதற்கு 19 மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு விதிகள் பெற்றுக் கொடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடமும், பள்ளிக் கல்விச் செயலரிடமும் பேசிவிட்டு, பெற்றோரிடம் தெரிவித்தோம். மாநிலக் கல்வி வாரியத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்பதால், அதற்குள் மாணவ, மாணவிகளைத் தயார்படுத்திக் கொள்ளலாம். அல்லது என்.ஐ.ஓ.எஸ். மூலம்தான் தேர்வு எழுத வேண்டுமானால், தொடர்ந்து அப்பள்ளியை நடத்துவதற்கு அறிவுறுத்தப்படும் எனக் கூறினோம். அதற்கு பெற்றோர்களும், மாணவர்களும் என்.ஐ.ஓ.எஸ். மூலம் அக்டோபரில் எழுதுகிறோம் என்றும், இது மனப்பூர்வமாக எடுத்த முடிவு எனவும் கூறினர். மேலும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அப்பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது” என்றார்.