மன்னார்குடி, ஜூன் 25 - பிஎஸ்என்எல் சேவை தரத்தை மேம்படுத்த வேண்டும். 4-ஜி சேவையில் உள்ள குறைகளை கலைந்து தரமான சேவையை வழங்கிட வேண்டும். இல்லந்தோறும் கண்ணாடி இழை சேவையை தரம் உயர்த்திட வேண்டும். 2ஜி, 3ஜி சேவைகளை மூடக் கூடாது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பக்கிரிசாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் எஸ்.சிவராஜன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பிச்சைக்கண்ணு கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.அகோரம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்டப் பொருளாளர் காளிமுத்து உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர். கோபிநாத் நன்றி கூறினார்.