திருவாரூர், பிப்.1- ஜன.24-ஆம் தேதி துவங்கிய திருவாரூர் மாவட்ட புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் தொடர்ந்து மாலை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கருத்தாளர்களின் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 8 ஆம் நாள் புத்தகத் திருவிழா நிகழ்வில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்திற்கு, நகராட்சி தஞ்சை மண்டல இயக்குனர் ஆ. தானுமூர்த்தி, தஞ்சை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் மு.மாஹிம் அபுபக்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். கருத்தரங்கத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் “வெல்லும் சொல்” என்ற தலைப்பிலும், எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் “கதை பிறந்த கதை” என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்றினார்கள். இதனைத் தொடர்ந்து புத்தகத் திருவிழா அரங்கில் நன்னூல் பதிப்பகம் உரிமையாளரும், புத்தக வெளியீட்டாளர் புரவலர் அப்துல் காதர் முன்னிலையில் முனைவர் பேரறிவாளன் பாஸ்கரன் எழுதிய குறியேடத்து தாத்திரிக் குட்டி என்ற ஒரு பெண்ணின் வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது. வரலாற்று ஆவண நூலை எழுத்தாளர் பாஸ்கரன் வெளியிட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் மற்றும் சிபிஎம் மாவட்டசெயலாளர் டி. முருகையன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சௌந்தரராஜன், செயலாளர் முனைவர் ஜீ.வெங்கடேசன் உள்ளிட்ட மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புத்தகத் திருவிழா பிப்ரவரி 2-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிறைவு பெறுகிறது.