புதுக்கோட்டை, ஜூலை 28 -
கிள்ளுக்குளவாய்ப்பட்டி ஊராட்சி கேர்காலனி மக்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கிள்ளுக்குளவாய்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கேர் காலனி பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 57 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இவர்களுக்கு இதுநாள்வரை மனைப் பட்டா கிடைக்கவில்லை.
இதனையடுத்து மேற்படி கிராம மக்கள், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட சின்னதுரை எம்எல்ஏ, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உடனிருந்தார்.