பொன்னமராவதி, ஜூலை 19 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நகரின் முக்கியப் பகுதியான அண்ணா சாலையில், சாலையின் நடுவே சுமார் 1000 மீட்டர் நீளமுள்ள ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், தார்ச் சாலை அமைக்காமல் மண் சாலையாக உள்ளது. இதனால் வெயில் அடிக்கும் போது மண் புழுதியாகவும், மழை பெய்யும் போது சேறும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 18 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சியினர், ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில், பொன்னமராவதி வர்த்தக கழக தலைவர் பழனியப்பன், செயலாளர் முகமது அப்துல்லா, பொருளாளர் ராமஜெயம் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினர். அதன் அடிப்படையில் ஜூலை 18 அன்று காலை ஒரு மணி நேரம் அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியல், கடை அடைப்பு தொடர்பாக பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில், “வர்த்தகர்கள் மற்றும் சிபிஎம் கோரிக்கைகளுக்கு முடிவு எட்டப்படாததால் ஆகஸ்ட் 1 -க்குள் பொன்னமராவதியின் முக்கிய வர்த்தகப் பகுதியான அண்ணா சாலையில் மண்புழுதி ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக சாலை அமைத்து தர வேண்டும். தவறும் பட்சத்தில் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்” என பொன்னமராவதி வர்த்தக கழகத்தினர் அறிவித்துள்ளனர். கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பொன்னமராவதி வர்த்தக கழக நிர்வாகிகள், வர்த்தகர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.