பாபநாசம்,டிச.15- பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், பாபநாசம் உட்கோட்டம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்புச் செயலர் மதுவநேசன் தலைமை வகித்தார். இதில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும், கிளை அஞ்சலகங்களுக்கு கணினி, பிரிண்டர் அதிவேக இணைய சேவை போன்றவற்றை வழங்கி சேவை தரத்தை உயர்த்த வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கோட்டச் செயலர்கள் முத்தமிழ்ச் செல்வன், கோட்டத் தலைவர் குடியரசன், கோட்டப் பொருளாளர் கருப்பையன், அமைப்புச் செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.