districts

தஞ்சை, புதுக்கோட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்/புதுக்கோட்டை, ஜூன் 30 -  உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹிர் என்ற அமைப்புக்கு ஆள்சேர்ப்பது, ஆதரவாகச் செயல்படுவது போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறி சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மானாங்கோரை, சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் நான்கு வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் வசிக்கும் அகமது என்பவரது வீட்டுக்கு ஞாயிறு காலை 6 மணிக்கு என்ஐஏ அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சென்ற குழுவினர் காலை 11.30 மணி வரை அகமதுவிடம் விசாரணை நடத்திச் சென்றனர். அதேபோல், தஞ்சாவூர் அருகே மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ ஆய்வாளர் அருண்மகேஸ் என்பவர் தலைமையில் அதிகாரிகள் காலை 7 மணி முதல் 11.30 மணி வரை விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் அருகே சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரகுமான் ஆகியோரது வீடுகளில் என்ஏஐ கூடுதல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் காலை 7.30 மணி முதல் காலை 11.30 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது என்ஐஏ அதிகாரிகள் சில பென்டிரைவ், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.  மண்டையூர் தஞ்சை சாலியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல்காதர் (51) என்பவர், புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே வடகாட்டில் உள்ள ரபியுல்லா என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். எனவே, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இங்கு வந்த என்ஐஏ அதிகாரி விஷ்ணுசங்கர் தலைமையிலான 8 பேர் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.  தொடர்ந்து அப்துல்காதரிடமும் விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் அவரிடமிருந்து ஒரு கைப்பேசி மற்றும் சிம் அட்டை ஆகியவற்றை வாங்கிச் சென்றுள்ளனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை காலை 8.30 மணிக்கு நிறைவடைந்தது.