தஞ்சாவூர், டிச.3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணியின் பேராவூரணி வடக்கு ஒன்றியம் சார்பில், “நீட் விலக்கு, நம் இலக்கு” என்ற கோரிக்கையை முன்வைத்து கையெழுத்து இயக்கம், குடியரசுத் தலைவருக்கு அஞ்சலட்டை எழுதும் இயக்கம் மற்றும் பிரச்சார வாகன பயணம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர்.கே.பி.குமார் வரவேற்றார். தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் நீட் விலக்கு குறித்து பேசினார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, எம்எல்ஏ-க்கள் இருவரும் நீட் எதிர்ப்பு பதாகையில் கையெழுத்திட்டு, பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். தஞ்சை மாவட்டத்திலேயே முதல் முறையாக நீட் விலக்கு பிரச்சார வாகனம் திருச்சிற்றம்பலத்தில் துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், தலைமை பொதுக்குழு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.