நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தஞ்சாவூர், ஏப்.1- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 சார்பில் சிறப்பு முகாம் துவக்க விழா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடை பெற்றது. முகாமிற்கு, அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. திருமலைச்சாமி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆர்.ராஜ்மோகன் வரவேற்றார். தமிழ் துறை தலைவர் சி.ராணி சிறப்புரையாற்றினார். இதில் பேரா சிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவி க.அபிநயா நன்றி கூறினார். கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இந்த முகாம் மார்ச் 31 முதல் ஏப்.6 வரை நடைபெறுகிறது.
ஏப்.13 வரை வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்படும்: ஆட்சியர்
தஞ்சாவூர், ஏப்.1- 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற வுள்ள நாளுக்கு, ஐந்து நாட்கள் முன்பு வரை அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.4.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற வுள்ளது. வாக்காளர் பட்டியலில் வாக்காளர் களின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற் காக வாக்காளர் தகவல் சீட்டை (Voter Infor mation Slip) அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திற்குட் பட்ட எட்டு (8) சட்டமன்றத் தொகுதிகளிலும் 1. 4.2024 முதல் 13.4.2024 வரை அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் சட்டமன்றத் தொகுதியின் பெயர், வாக்காளர் அடை யாள அட்டை எண், பாகம் எண், வாக்குச்சாவ டியின் பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip), அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என மாவட்ட தேர்தல் அலு வலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் விசா: ரூ.15.15 லட்சம் மோசடி
தஞ்சாவூர், ஏப்.1- தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரும் நபரிடம் குறைந்த விலையில் விசா பெற்றுத் தருவ தாகக் கூறி ரூ.15.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 49 வயது நபர், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரு கிறார். இவரது கைப்பேசிக்கு 2023 அக்.7 அன்று வந்த அழைப்பில் குறைந்த விலையில் விமானப் பயணச் சீட்டும், வெளிநாட்டு விசாவும் பெற்றுத் தருவதாகவும், வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் பெற்றுக் கொடுப்பதாக வும் மர்ம நபர் கூறினார். இதை நம்பிய அவர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.15,15,385-ஐ அனுப்பினார். ஆனால், அதன் பின்னர் மர்ம நபர் கைப்பேசியை எடுக்காமலும், விமானப் பயணச்சீட்டு, விசா பெற்றுத் தராமலும் ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவு காவல் துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்
தஞ்சாவூர், ஏப்.1- தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2008 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வழித்தடத்தில், செங்கிப்பட்டி யில் இருபுறமும் சர்வீஸ் சாலை யுடன் கூடிய மேம்பாலம் கட்டப் பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 20 அன்று, மேம்பாலத்தின் பக்கவாட்டு சிமெண்ட் சுவர் அடுக்கு களில் சுமார் 60 அடி நீளம், 30 அடி அகலம் அளவுக்கு இடிந்து விழுந்து, மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பாலத்தில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. பிறகு, தில்லி ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் திருச்சி என்.ஐ.டி., பேரா சிரியர்களின் தொழில்நுட்ப ஆலோ சனைப்படி, மேம்பாலத்தை சீரமைக் கும் பணிகள் கடந்த 8 மாதங்க ளாக நடந்து வந்தன. தற்போது, சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ஞாயிறன்று முதல் மேம் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலை துறை அலுவலர்கள் கூறு கையில், தஞ்சாவூர் - திருச்சி மேம்பாலம் சேதமடைந்த பகுதி கள், கந்தர்வகோட்டை - பூதலூர் சுரங்கப் பாதை ஆகிய பகுதிகளை பலப்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இதனால் சர்வீஸ் சாலை களில் வாகனங்கள் திருப்பி விடப் பட்டன. பணிகள் தற்சமயம் முடிவ டைந்து போக்குவரத்து மீண்டும் துவங்கிவிட்டது. சேதமடைந்த பாலத்தில் 650 இடங்களில் ஆணி, எஃகு வலுவூட் டல்களை கொண்டு, மறுசீரமைப்பு நடந்துள்ளது. மேலும், கட்ட மைப்பை உறுதிப்படுத்துவதற் காக, 32 மி.மீ விட்டம் கொண்ட எஃகு கம்பிகள் மண்சரிவு ஏற்பட்ட அடிப்பகுதியில் சொருகப்பட்டு உள்ளது” என்றனர்.
இளைஞர்களுக்கு மென்பொருள் பயிற்சி
பாபநாசம், ஏப்.1 - ஐடி பினிஷிங் அகாடமி, ஸ்ரீஸ்ரீ ரூரல் டேலண்ட் இன்னோவேஷன் மையம், கிராமப்புற முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தகவல் தொழில்நுட்பம், மென் பொருள் படிப்புகள் குறித்த இலவச பயிற்சியை தஞ்சா வூர் மாவட்டம் பாபநாசத்தில் நடத்தியது. இதில் பொறியியல், கணினி அறிவியல் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜாவா, ஜே யூனிட், வெப் டெவலப்மென்ட் - ஹெச்டிஎம்எல் உடன் ஜாவாஸ்கிரிப்ட், ஜாவா திட்டங்கள், ஆங்கிலத் தொடர்பு, வாழ்க்கைத் திறன், நேர்காணல் உள்ளடக்கிய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 4 மாதங்களாக பயிற்சி பெற்ற 30 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிட்டி யூனியன் வங்கி பவுண்டேசன் சேர்மன் பாலசுப்ரமணியன் மாணவர்களுக்கு சான்றி தழ்களை வழங்கினார். இதில் ஸ்ரீஸ்ரீ ரூரல் டேலண்ட் இன்னோவேஷன் மைய இயக்குநர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
அறந்தாங்கி, ஏப்.1 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் தாலுகா ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் அருகில் இருந்த கம்பி முள்வேலியில் மின்சாரம் பாய்ந்து ஒரு மாடு உயிரி ழந்தது மற்றும் ராஹீதா (50) என்ற பெண் உயிரி ழந்தார். தலிமா (26) என்ற கர்ப்பிணிப் பெண் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இறந்த ராஹீதாவின் உடல் கூறாய்வுக்காக மண மேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மீமிசல் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரி ழப்பை ஏற்படுத்திய இந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டு சிறை
புதுக்கோட்டை, ஏப்.1 - ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக் கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் அருகே போலம் பட்டி வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சோலையப்பன் (53). இவர், கடந்த 2022 ஆக.21 அன்று, 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அவரது பெற்றோர் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போக்சோ மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சோலையப்பனைக் கைது செய்த னர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.ஜெயந்தி திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கி னார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 4 லட்சமும், குற்றவாளி யிடம் பெறப்படும் அபராதத் தொகை ரூ.30 ஆயிரத்தையும் சேர்த்து வழங்க வேண்டும். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்கள் திறனாய்வுக் கூட்டம்
புதுக்கோட்டை, ஏப்.1 - எழுத்தாளர் ரா.ராஜநாராயணன் படைப்புகள் குறித்த திறனாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கவிஞர் கவி.முருகபாரதி தலைமை வகித்தார். புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி அறிமுக உரையாற்றினார். ராஜநாராயணனின் ‘இவர்கள் வேறு யாருமல்லர்’ என்ற நூல் குறித்து முனைவர் இரா.முத்துக்கருப்பன், ‘எண்ணமும் ஏற்றமும்’ என்ற நூல் குறித்து ச.சுதந்திர ராஜன், ‘வைகைப்புயல் வடிவேலு’ என்ற நூல் குறித்து கவிஞர் சு.பீர்முகமது, ‘விவேக் அல்லது சின்னக் கலை வாணர்’ என்ற நூல் குறித்து முனைவர் மகா சுந்தர், ‘கீழடிப் புதையல்’ என்ற நூல் குறித்து அண்டனூர் சுரா ஆகியோர் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றி னர். எழுத்தாளர் ராஜ நாராயணன் ஏற்புரையாற்றினார். முன்னதாக பேரா.கருப்பையா வரவேற்க, முனைவர் பாரதிஸ்ரீ நன்றி கூறினார். கவிஞர் வம்பனார் அன்பழகன் விழா நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மாநில அளவிலான தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி
விருதுநகர், ஏப்.1- விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். போட்டியில் திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் கழகத்தின் இணை இயக்குநர் சங்கர சரவணன் நடத்தி னார். இதில், தனித்துணை ஆட்சியர் பிரேம்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.