நவீன எரிவாயு தகன மேடையை பயன்படுத்திக் கொள்ளலாம் பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் தகவல்
தஞ்சாவூர், பிப்.7- பேராவூரணி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பேராவூரணி புதுக்கோட்டை சாலையில் உள்ள நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்திக் கொள்ளலாம் என பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பேராவூரணி பேரூராட்சியில் பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையை ஏற்று நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சடலத்தை எரியூட்ட கட்டணமாக ரூ.3,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பேராவூரணி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்திக் கொள்ளலாம். நவீன எரிவாயு தகன மேடையை சென்னை மோஷ்த்வாரா அறக்கட்டளை பராமரித்து வருகிறது. மேலும், இது குறித்து விவரங்கள் அறிய, 9597188039, 7904161493, 9789888713 ஆகிய அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கும்பகோணம், பிப்.7- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் கோட்டம், திருவிடைமருதூர் (நெ) உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளான திருவிடைமருதூர் - தண்டந்தோட்டம் சாலை, திருலோகி - துகிலி சாலை மற்றும் முள்ளங்குடி - போழக்குடி சாலை ஆகிய பணிகளை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவிக் கோட்டப்பொறியாளர் சிவக்குமார். இளநிலைப் பொறியாளர் கந்தன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர். மேலும், சாலையின் தரம் குறித்தும், பராமரிப்பு பணிகள் குறித்தும் பொறியாளர் அறிவுரை வழங்கினார்.
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வன்கொடுமை தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது
தஞ்சாவூர், பிப்.7- தஞ்சாவூர் அருகே, மாற்றுத்திறனாளி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் நிதி நிறுவன ஊழியரைக் காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர். தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஜெ.சண்முகராஜ் (42). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவர், திருவையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் கைப்பேசிக்காக வாங்கப்பட்ட கடன் தொகையை வசூல் செய்வதற்காக, தொடர்புடைய வீட்டுக்கு கடந்த நவம்பர் மாதம் சென்றார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை சண்முகராஜ் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர்.
குற்றச் செயல்களைக் கண்டுகொள்ளாத காவல்துறை: சிபிஎம் கண்டனம்
புதுக்கோட்டை, பிப்.7- குற்றச் செயல்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழங்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகின்றன. காவல்துறை அவ்வப்போது உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் அடுத்தடுத்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுத்து இருக்க முடியும். ஆனால், காவல்துறையோ பெயருக்கு வழக்குப் பதிவு செய்து, அவர்கள் எளிதில் விடுதலை அடைய வழி வகுக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீப காலமாக ஆளில்லாத வீடுகளை கண்டறிந்து பூட்டை உடைத்து திருடும் சம்பவம் புதுக்கோட்டை நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. அதே போல கஞ்சா போதைப் பொருட்களும் அதிக அளவில் புழங்குகிறது. இதனால், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதால், அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது. யார் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது என்பதை காவல்துறையினர் நினைத்தால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும். காவல்துறையினரின் அலட்சியமே போதைப் பொருட்களின் புழக்கத்திற்கு காரணமாக உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்படி குற்றச் செயல்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிராம அளவில் வர்த்தக ஒருங்கிணைப்பாளர்களை ஈடுபடுத்தும் முன்மாதிரி திட்டம்
பாபநாசம், பிப்.7- வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல் பட்டு வரும், தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்கு உட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கிராம அளவில் வர்த்தகத்தை, வர்த்தக ஒருங்கிணைப்பாளர்களை ஈடுபடுத்தும் முன்மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கிடவும், பண்ணை வாயில் வர்த்தகம் மூலம், வரத்தினை அதிகரித்திடவும், விவசாயிகளின் போக்குவரத்து செலவீனத்தை குறைக்கவும், அறுவடைக் காலங்களில் வரத்தினை சீராக்கும் வகையில், கிராம அளவில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்கள் தவிர தோட்டக் கலை பயிர்களான வாழை, காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் போன்றவற்றையும், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாபநாசம் வட்டாரத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்புக் கவுணி, மாப்பிள்ளைச் சம்பா, சீரக சம்பா, தூய மல்லி போன்றவை பயிரிடப்பட்டு, அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன. பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடி பரப்பினை அதிகரித்திடும் வகையில் விவசாயிகளுக்கு அதிக பட்ச விலை கிடைக்க ஏதுவாக, பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை விற்பனைக் கூடத்தில் மறை முக ஏலம் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வணிகர்களைக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு தலைமையில், கும்பகோணம் வேளாண் வணிகம், வேளாண்மை அலுவலர் தாரா, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி முன்னிலையில், மறைமுக ஏலம் நடந்தது. மறைமுக ஏலத்தில் பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த 6 விவசாயிகள் கருப்புக்கவுணி மற்றும் மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தினை விற்பனைக்கு எடுத்து வந்தனர். மறைமுக ஏலத்தில் 7 வணிகர்கள் கலந்து கொண்டனர். 4.500 மெட்ரிக் டன் கருப்பு கவுணி அதிகபட்சம் கிலோவிற்கு ரூ.59 க்கு விற்பனையானது. பரிவர்த்தனை மதிப்பு ரூ.2.65 லட்சம். விவசாயிகளின் விளை பொருளுக்குரிய கிரயத் தொகை இ நாம் மூலம் அவர்களது வங்கி கணக்கில் வரவானது.
மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: மக்களை கவரும் பாரதி புத்தகாலயம்
மயிலாடுதுறை, பிப்.7- மயிலாடுதுறையில் ஜனவரி 31 முதல் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழா வளாகம் 7, 8 அரங்குகளில் பாரதி புத்தகாலயம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு வரும் நிலையில் ஆறாவது நாளான புதனன்று மாலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், தோழர் பிருந்தா கராத் எழுதிய “ ரீட்டாவின் கல்வி “ என்னும் சுய சரிதை புத்தகத்தை வெளியிட, ஏழிசை இசைகல்லூரியின் இயக்குநர் முனைவர் ராச. கலைவாணி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.