பாபநாசம் அருகே மருத்துவ முகாம்
பாபநாசம், பிப்.17- தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர், இந்திய பல் மருத்துவ சங்கம், தஞ்சாவூர் கிளை மற்றும் அரசு கண் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசம் அருகே, இரும்புதலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமில் பொது மருத்துவம், கண், பல் உள்ளிட்டவற்றிற்கு டாக்டர் கார்த்திகேயன் கோவிந்தராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் 120 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் உயரம், எடை, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. எக்கோ, ஈ.சி.ஜி மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலாஜி, தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கத் தலைவர் சிவ சண்முக சுந்தரம், செயலர் விஜயகுமார், முன்னாள் தலைவர்கள் சுப்ரமணியன், கலைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை மெகா கல்விக்கடன் மேளா
புதுக்கோட்டை, பிப்.16- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாணவர்களின் உயர்கல்விக்கான கல்விக்கடன் முகாம், பிப்.18 அன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வளாக கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், கல்லூரி முதல்வர்களுக்கும், வங்கியாளர்களுக்கும் கல்விக்கடன் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ.24 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் பல்வேறு கல்விக்கடன் முகாம்களை நடத்தியுள்ள நிலையில் அதனைத்தொடர்ந்து, பிப்.18 அன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அலுவலர்களும், மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண்ணப்பிப்பதற்கும், பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் கல்விக்கடன் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
காலமானார்
திருவாரூர், பிப்.16- திருவாரூர் வட்டம் துறையூர் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜேந்திரனின் தாயார் மாரியாயி, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 110. இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் சுந்தரய்யா, கட்சியின் மூத்த தோழர்கள் என். இடும்பன், பி. மாதவன் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சக்திவேல், கணேசன், தியாகராஜன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதி அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
புதுக்கோட்டை, பிப்.16- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் நலக் கல்லூரி மாணவர் விடுதியினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி. அமீர்பாஷா, வட்டாட்சியர் மு. செந்தில்நாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் விருது பெற்ற ரோபோடிக் விஞ்ஞானி கென்னித்ராஜுக்கு பாராட்டு விழா
அறந்தாங்கி, பிப்.16- திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் விருது பெற்ற ரோபோடிக் விஞ்ஞானி கென்னித் ராஜ் அன்புக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக அறந்தாங்கியில் பாராட்டு விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன் தலைமையில், காங்கிரஸ்சின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் கராத்தே கண்ணையன், மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கடேசன், டி.ஏ.என். பீர்சேக், கஸ்தூரி ரங்கன், அப்துல் பாரி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர். தெட்சிணாமூர்த்தி தொடக்க உரையாற்றினார். கவிச்சுடர் கவிதை பித்தன் சிறப்புரையாற்றினார். ரோபோட்டிக் விஞ்ஞானி கென்னித் ராஜ் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக திசைகள் அமைப்பின் பொருளாளர் முகம்மது முபாரக் வரவேற்றார். கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் நன்றி கூறினார்.
அனுமதியின்றி கனிமவளம் எடுத்து வந்த 6 லாரிகள் பறிமுதல் 8 பேர் மீது வழக்கு - 2 பேருக்கு சிறை
நாகர்கோவில். பிப்.16- கனிம வளத்துறையின் அனுமதியின்றி கனிமவளம் எடுத்து வந்த 6 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடசேரி காவல்துறையினர் வெட்டூர்ணி மடம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கனிமவளத்துறையின் எந்தவித அனுமதிச் சீட்டும் இன்றி சட்டவிரோதமாக கனிம வளம் ஏற்றி வந்த ஆறு டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் இரண்டு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று காவல் துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை - மகன் பலி
திருநெல்வேலி, பிப் 16- நெல்லை டவுன் பகுதியில் உள்ள மினிக்குடி தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (55). இவரது மகன் கிருஷ்ண சங்கர் (22). மாதவன் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரது மகன் கிருஷ்ண சங்கர் சென்னையில் சிஏ படித்து வந்தார். இவர் பயிற்சிக்காக நண்பர்களுடன் துபாய்க்கு சென்றிருந்தார். கடந்த 12 ஆம்தேதி, அவர்கள் தங்கியி ருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கினர். அவருக்கு நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். அவரை காப்பாற்ற மாதவன் நீரில் இறங்கியபோது, அவரும் மூழ்கினார். இதில் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் துபாயி லிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு நெல்லையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிந்து பூந்துறை எரிவாயு தகனமேடையில் எரியூட்டப்பட்டது. கண வரும், மகனும் இறந்த துக்கம் தாங்க முடியாமல் விமலா தன்னுடைய கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கீழப்பாவூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல்
தென்காசி, பிப்.16- தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு பிப்ரவரி 16 அன்று தமிழக வருவாய் -பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர்.ஏ.கே.கமல் கிஷோர், , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்.ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர்.எஸ்.பழனிநாடார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காவேரி சீனித்துரை, துணைத்தலைவர் முத்துக்குமார், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தை மணி, பால்ராஜ் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை
திருநெல்வேலி, பிப் 16- நெல்லை மாவட்டத்தில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லை முதல் தென்காசி வரையுள்ள உள்ள ஊர்கள் அனைத்தும் இப்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால் ரயில் போக்குவரத்து சற்றே குறைவாக உள்ளது. இது நேரடி வழியில் இல்லாமல் இரு பெரும் நகரங்களுக்கு இடையே உள்ளதுதான் இதற்கு காரணம். ஆகையால் இராஜபாளையம் வழியாக சங்கரன்கோவில், தேவர்குளம், சுரண்டை, ஆலங்குளம் வழியாக கள்ளிடைக்குறிச்சி அம்பையை இணைத்துவிட்டால் ஒரு சில ரயில்களை இந்த பாதை வழியாக இயக்கலாம். சுற்றிச்செல்வதும் குறையும். மேற்கண்ட ஊர்களுக்கும் ரயில் வசதி கிடைக்கும் என்று பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.