தூத்துக்குடி, அக். 5- இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் எந்தஒரு செயல் செய்வதாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவுரை வழங்கினார். தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் சனிக்கிழமை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்முகத்தேர்வு மூலமாக தெரிவு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கு நல்ல ஊதியத்தில் பணி கிடைக்கப்பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே அவர்களது வாழ்நாள் இலட்சியமாகும். அத்தகைய இளைஞர்களின் நலனில் பெரிதும் அக்கறைகொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக முழுவீச்சில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார்துறையில் பணிநியமனம் பெறும் வகையில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை பெரிய அளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 17.02.2024 அன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 80 வேலையளிக்கும் நிறுவனங்களும் 1150 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் 133 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிநியமனம் பெற்றனர். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் 143 தனியார்துறை நிறுவனங்களும், 10 திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்து மேற்பட்ட 5000க்கும் கொண்டு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, உங்களுடைய குடும்ப நலனை மனதில் வைத்துக்கொண்டு, இளைஞர்கள் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் படித்து முடித்து ஏதாவது ஒரு நிறுவனத்திலோ அல்லது சுயதொழில் தொடங்கியோ அதிகப்படியான வருமானம் ஈட்டி வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்;வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இம்முகாமில், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வா.இ) பெ.மல்லிகா மற்றும்0 பலர் கலந்து கொண்டனர்.