districts

ஒடிசா ரயில் விபத்து நீதிபதி தலைமையில் விசாரணை தேவை எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்

பாபநாசம், ஜூன் 5-  

     ஒடிசா ரயில் விபத்து குறித்து கண் துடைப்பு விசாரணை நடத்த வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.  

    இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது வெறும் கண்துடைப்பு விசாரணையாகவே அமையும். உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இவ்விபத்து குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற்றால் தான் ஓரளவிற்கு விபத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும்.  

    தண்டவாளங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக காலியாக இருக்கும் மூன்று இலட்சம் ரயில்வே காலிப்பணியிடங்கள் நிரந்தர ஊழியர்களுடன் உடனடியாக நிரப்பபட வேண்டும். உலகின் மிகப்பெரிய துறையான இந்திய ரயில்வேயை தனியார் மையம் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசு இதை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகி வருகிறது.

    குறைந்த செலவு நிறைந்த வசதி, பயணத்தில் பாதுகாப்பு’ என்பது ரயில் பயணத்தின் இலக்கணமாக இருந்து வந்தது . ஒன்றிய பாஜக அரசு பதவி ஏற்றதும் அதிக கட்டணம், குறைந்த வசதிகள், பயணத்தில் பாதுகாப்பின்மை என ரயில் பயணத்தின் தன்மையை மாற்றி விட்டது . அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் காலடியில் ரயில்வே துறையை வைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முன் முயற்சி போல இந்த நிலைமை தோன்றுகிறது.

    ரயில் பயணங்களை பாதுகாப்பு மிகுந்ததாக அமைய வைக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்கவேண்டும்.தனியார்மயம் மூலம் ரயில்வே நிறுவனத்தை தடம்புரள வைக்கும் முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும்’’ என கூறியுள்ளார்.