districts

img

ஆணைக்காரன்சத்திரம் -கோபாலசமுத்திரம் ஊராட்சிகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சியாக உருவாக்க எதிர்ப்பு

மயிலாடுதுறை, ஜன.6-  மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.                                                                               ஆனைக்காரன் சத்திரம் மற்றும் கோபால சமுத்திரம் ஊராட்சிகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சி உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணை எண் 204 ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்து. இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாரம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சியில் உள்ள 14 வார்டுகள், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 10 வார்டுகள் என 24 வார்டுகளை இணைத்து, கொள்ளிடம் பேரூராட்சியை உருவாக்கும் அறிவிப்பு, கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.  ஆனைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்காமல் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பால், ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான 100 நாள் வேலைத்திட்டம், தொகுப்பு வீடு திட்டம் ஆகியவற்றை இழப்பதுடன், கூடுதல் வரி செலுத்தும் நிலையும் ஏற்படும். இதனால் பெரும் பாதிப்புக்கு மக்கள் தள்ளப்படுவர் என்பதால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் திங்களன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவரும், புளியந்துறை ஊராட்சித் தலைவராக பதவி வகித்தவருமான அ. நேதாஜி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் கே.கேசவன் மாவட்டக்குழு உறுப்பினர் எல்.சுந்தரலிங்கம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், விடுதலை சிறுத்தைகள், தமுமுக, மூமுக, தமிழக வெற்றிக் கழகத்தினர், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 2  ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை முழங்கியும், கண்டன முழக்கமிட்டும் கொள்ளிடம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு  கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஏற்கனவே விவசாய கூலி வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கிராமப்புற மக்களை வஞ்சிக்கக்கூடிய பேரூராட்சியாக மாற்றும்  முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த மாபெரும் போராட்டம் நடைபெற்றது.  தகவலறிந்து வந்த சீர்காழி பொறுப்பு கோட்டாட்சியர். ரவி, டிஎஸ்பி ராஜேந்திரன், வட்டாச்சியர் அருள்ஜோதி ஆகியோர் போராட்டக்குழுவின் முக்கியத் தலைவர்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில், இரண்டு ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியாக உருவாக்குவதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து, மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்துவது, இரு ஊராட்சிகளிலும் மக்களிடம் கருத்து கேட்ட பிறகே, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளிக்கப்பட்டது.  இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலகிக் கொள்ளப்பட்டது.