திருவாரூர், அக்.12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் தியாகி எம்.கண்மணி 29 ஆவது நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் கடைவீதியில் உள்ள நினைவிடத்தில் புதன்கிழமை வீரவணக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கொரடாச்சேரி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தியாகி எம்.கண்மணி நினைவிடத்தில் அமைக்கப்பட்ட, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தியாகி எம்.கண்மணியின் சகோதரருமான எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ்.செந்தில், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அம்மையப்பன் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.