திருவாரூர், அக்.30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாசில்லா திருவாரூர் சார்பில் “புகையில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை” மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவிக்கையில், “தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயித்துள்ளது” என்றார். முன்னதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாசில்லா திருவாரூர் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சுற்றுசூழல் பொறியாளர் ரெங்கராஜ், உதவி மேலாளர் மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.