புதுக்கோட்டை, நவ.22 - அரசு அலுவலகங்களில் பேச்சு வழக்கில் உபயோகப்படு த்தப்படும் ஆங்கிலச் சொற்களை தவிர்த்து, தமிழிலேயே உரையாடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு பணியாளர்களுக்கு, சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பேசியதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழியினை அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிமொழி பயிலரங்கம்-கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இப்பயிலரங்கத்தில் ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழி சட்டம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழி செயலாக்கம் ஆணைகள், மொழிப்பயிற்சி மற்றும் மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் குறித்து விரிவாக அரசு அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களை தவிர்த்து, தமிழிலேயே உரையாடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அலுவலர்களிடையே குறுஞ்செய்தி மூலம் தகவல் பரிமாறப்படும் போது தமிழ் வழியிலேயே அனுப்பிட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் தமிழ்மொழி, பழமையின் சிறப்பும், ஆற்றலும் ஒருங்கே பெற்று விளங்கிட வழிவகை செய்யும் என்றார். மேலும், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.76,000 பரிசுத் தொகைக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி) ச.சீதாலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, தமிழ்நாடு அரசு பாடத் திட்டக்குழு உறுப்பினர் கும.திருப்பதி, கவிஞர் தங்கம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.