தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
♦ புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சி 6 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுன்சிலராக கே.மகாலெட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
♦ திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி 15 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆனந்தமேரி (34) புதன்கிழமை மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி மற்றும் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
♦ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு, புதனன்று தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கமலக்கண்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ்கள் வழங்கினார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
♦திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 24 உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மனோகரன், ஒவ்வொருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
♦ புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி 15 ஆவது வார்டு கவுன்சிலராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞா.பாலமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
♦ தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பேரூராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் 14 உறுப்பினர்களுக்கு மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மெலட்டூர் பேரூராட்சி 5 ஆவது வார்டு திமுக உறுப்பினர் துர்கா தேவி பதவியேற்றார்.