பெரம்பலூர், பிப்.1- பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாக திடலில் மாவட்ட நிர்வாகமும், மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தும் 9 ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சி தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற, புத்தகத் திருவிழாவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்தறை அமைச்சர் கணேசன் திறந்துவைத்து பேசுகையில், புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியாவில் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. படிப்பு என்பது அனைவருக்கும் அடிப்படையானது. வாசிக்கும் பழக்கத்தினை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் தான் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை அப்படியே விட்டு விடாமல் தங்களது வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். விழாவில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முன்னிலை வகித்து பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் கட்செவி (வாட்ஸ் அப்) மூலம் வரும் செய்திகளை படித்து அதனை மட்டுமே பேசுகின்ற ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால் இளைய தலைமுறைகள் புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகங்கள்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம். நாம் வாழுகின்ற காலத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை பார்த்தால் அதனை அடுத்த நாள் மறந்துவிடும் சூழல் தற்போது நிலவி வருகிறது. ஆனால் அவை நூலாக பதியப்படும்போது அது ஒரு வரலாறாக மாறுகிறது. நம் தாய்மொழி உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால் நாம் நூல்களை வாசிக்க வேண்டும். எனவே இளம் தலைமுறையினர் நூல்களை படித்து தெரிந்து கொண்ட விஷயங்களை தங்களுடைய நண்பர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். இளம் சமுதாயத்தினரின் எதிர்காலம் காக்கப்படுவதற்காக அனைவரும் புத்தகத்தை நேசியுங்கள் என தெரிவித்தார். இந்த புத்தகத் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இப்புத்தக கண்காட்சியில் அரசு துறைகள் சிறப்பு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்த கண்காட்சி அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரும் பிப்.9 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ள இப்புத்தக திருவிழாவில் தினமும் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவு, கருத்தரங்கு, பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பசேரா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.