districts

பயறு வகை பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம் கட்டுப்படுத்தும் முறை: வேளாண் அதிகாரி விளக்கம்

சீர்காழி, மார்ச் 12 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம், பெரம்பூர், வடரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து உள்ளிட்ட பயறுவகை பயிர்கள் விதைப்பு செய்யப்பட்டிருப்பதை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் கூறுகையில், பயறுவகை பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் பரவலாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  இந்நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள இளம் இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, பின்பு மஞ்சளும் பச்சையும் கலந்த மஞ்சள் தேமல் போல் காணப்படும்.  புதிதாக உருவாகும் இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட செடிகள் வளம் குன்றி, வளர்ச்சி குன்றி காணப்படும். காய்களின் எண்ணிக்கை குறைவதோடு மஞ்சள் நிறம் அடையும். இதனை ஆரம்பத்திலேயே  கட்டுப்படுத்துவதற்கு ஆரம்ப நிலையில் வளரும் சில செடிகளை பிடுங்கி அகற்றிவிட வேண்டும்.  மேலும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, நோய் தாக்காத வம்பன் 6, வம்பன் 8 மற்றும் வம்பன் 11 ஆகிய வகையிலான உளுந்து விதைகளை விதைக்கலாம். நோய் எதிர் உயிர் கொல்லியான பேசில்லஸ்சப்டிலிஸ் என்ற பாக்டீரியா வகையை ஹெக்டேருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து மக்கிய தொழு உரம் 250 கிலோவுடன் கலந்து வயலில் இடவேண்டும். இப்படி செய்வதன் மூலம் இந்நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றார்.