districts

img

கரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயலாக்கம்

கரூர், ஜூலை 23 - கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் 2403.07 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.16.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் செய்தியாளர்கள் பயணத்தின் போது தெரிவித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சித்தலவாய் கிராமம் முனையனூரில் விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் அமைத்துள்ள கோ-32 இரக சோள விதைப் பண்ணையில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்-ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் 2024-25 திட்டத்தின்கீழ் கிலோ ஒன்றுக்கு எட்டு ரூபாய் ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.24,000 மதிப்பீட்டில் மானியமாக வழங்கப்படவுள்ளது. மேலும் விவசாயி, இயற்கை வேளாண்மை குறித்து வேளாண்மைத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின், ரசாயன உரங்களை தவிர்த்து, தனது பயிர்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதையும், பசுமை போர்வை திட்டத்தின் மூலம் முனையனூரில் விவசாயி ஒருவருக்கு  வழங்கப்பட்டுள்ள 400 தேக்கு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் – புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் 140 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் மேட்டுதிருக்காம் புலியூர் கிராமத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் பயன்பெற்றது, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் புதுப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் பயிரிடப்பட்ட மரவள்ளி பயிருக்கு ரூ.46,554 மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மஹாதானபுரம் தெற்கு, புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் 0.63 ஹெக்டேர் பரப்பில் பயிர் மூடாக்கு முறையில் பயிரிடப்பட்ட தர்ப்பூசணி பயிருக்கு ரூ.81,076 மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. முதன்மை பதப்படுத்தும் மையத்தில் வாழை, முருங்கை மற்றும் மா போன்ற வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டுவதற்கான இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆய்வு செய்யப்பட்டது. பிள்ளப்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரினை இறைப்பதற்கு சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டு அமைத்து மொத்தம் ரூ.5.08 லட்சம் மதிப்பீட்டில் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதையும், நிலத்தில் விழும் மழை நீரினை வீணாக்காமல் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு 100 சதவீத மானியத்தில் ரூ.1.34 லட்சம் மதிப்பிட்டில் பண்ணைக்குட்டை அமைத்துத் தரப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது வேளாண்துறை துணை இயக்குநர் கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, உதவி இயக்குநர்கள் மணிமேகலை (விதைச்சான்று), அரவிந்தன் (வேளாண்மை) மற்றும் செய்தியாளர்கள் உடனிருந்தனர்.