districts

img

அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் தங்கும் விடுதி காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, நவ.29 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த மருதன்கோன்விடுதியில் ரூ.2.12 கோடி மதிப்பிலான பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியை புதன்கிழமை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த மருதன்கோன்விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதியில் 10 மாணவர்கள் தங்கும் அறைகளும், உணவு அருந்தும் கூடம், விடுதி காப்பாளர் அறை, சமையலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் தரைத்தளத்துடன் கூடிய இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. இவ்விடுதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மருதன்கோன்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.  நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராவூரணியில் மாணவியர் விடுதி  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்களுக்கான புதிய தங்கும் விடுதி, ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலிக் காட்சி மூலம் சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார்.  இதையொட்டி, பேராவூரணி அரசுக் கல்லூரி மாணவியர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, வட்டாட்சியர் தெய்வானை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.