மயிலாடுதுறை, செப்.16 - மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் போக்குவரத்து காவலர் அலுவலகக் கட்டடம் மற்றும் காவலர் பல்பொருள் நல அங்காடி ஆகியவற்றை தமிழக காவல்துறை தலைவர் செ.சைலேந்திரபாபு திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அண்மையில் உருவாக்கப்பட்ட மாவட்டங்களான செங்கல்பட்டு, ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களுக்கான காவலர் பல்பொருள் நல அங்காடிகளையும் காணொலி வாயிலாக அவர் துவக்கி வைத்தார். தொடர்ந்து காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டிஜிபி செ.சைலேந்திரபாபுவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மயிலாடுதுறை மாவட்டத்தில் விரைவில் ஆயுதப்படை காவலர் பிரிவு துவக்கப்படும். மாவட்ட காவல்துறை அலுவலகம் விரைவில் செயல்பட துவங்கும். மயிலாடுதுறை நகரில் இரண்டாவது காவல் நிலையம் துவங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார், தஞ்சை சரக டிஐஜி அ.கயல்விழி, மயிலாடுதுறை எஸ்.பி என்.எஸ்.நிஷா, டி.ஜிபி அலுவலக காவலர் நலன் பிரிவு எஸ்.பி.ராமகிருஷ்ணன், மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.