districts

img

சுதந்திர தினம்: டெல்டா மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டங்கள்

கும்பகோணம், ஆக.17 - 78 ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாபுராஜபுரம் ஊராட்சியில், நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம், உரிய அரசுத்துறை அலுவலர் கூட்டத்திற்கு வராததால் நண்பகல் 1 மணிக்கு தொடங்கியது. பாபுராஜபுரம் ஊராட்சியில், 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவ்வூராட்சியில் முறையான முன்னறிவிப்பின்றி 3 மணி நேரம் தாமதமாக கிராம சபை கூட்டம் தொடங்கியது. இதைக் கண்டித்து ஒரு பிரிவினர், ஒட்டுமொத்தமாக இவ்வூராட்சியில் ஊழல் மற்றும் முறைகேடு தலைவிரித்து ஆடுகிறது. குடிநீர் தொட்டிகள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. குடிநீர் பழுப்பு நிறத்தில் வருகிறது. பல தெருவிளக்குகள் எரியவில்லை. மேலும், பாபுராஜபுரம் ஊராட்சியின் பெண் தலைவரான மகேஸ்வரிக்கு (திமுக) பதிலாக, அவர் சார்பாக அவரது கணவர் கணேசனும், குடும்ப உறுப்பினர்களுமே தலைவராக செயல்படுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்வதாகக் கூறி, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை ஊராட்சியில் இருந்து எடுக்கப்படுகிறது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பும் புதனன்று இரவு 7 மணிக்கு பிறகுதான் வெளியிடப்பட்டது. இத்தகவல் பலருக்கு சென்றடையவில்லை. 7 ஆயிரம் பேர் கொண்ட இந்த ஊராட்சியில், தகவலறிந்து காலை 10 மணிக்கு வந்த மக்களில் சிலர், கூட்டம் தொடங்க நேரம் ஆகும் என தெரிந்து, மதியம் 12 மணிக்குப் பிறகு ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.  பின்னர் ஒரு வழியாக, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த்ராஜ் (கிராம ஊராட்சிகள்) புத்தம் புதிய ஜீப்பில் வந்திறங்க, நண்பகல் 1 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் அவரிடம் தெரிவித்தனர். மேலும், கூட்டம் இவ்வளவு தாமதமாக தொடங்குவதாலும் பலர் இக்கூட்டத்தில் தொடர்ந்து காத்திருக்க முடியாமல் வெளியேறியதாலும், இக்கூட்டத்தை மறுதேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, இதனை கண்டிக்கும் விதமாக அவர் மற்றும் அவரைச் சார்ந்த சிலர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.  பின்பு, சுவாமிமலை போலீசார் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அங்கு வரவழைக்கப்பட்டனர்.  பாபநாசம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இதில் இணைய வழி வீட்டு வரி, தூய்மையான குடிநீர், இணைய வழி மனைப் பிரிவு, தூய்மை பாரத இயக்கம், நூறு நாள் வேலை, ஜல் ஜீவன், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடந்தது.  ராஜகிரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சமீமா பர்வீன் தலைமை வகித்தார். ரெகுநாதபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இதில் ரெகுநாதபுரம் ஊராட்சியை, ஊராட்சியாக தொடர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின. மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் பழனி தலைமை வகித்தார். இதில் மாவட்டக் கவுன்சிலர் ராதிகா, ஒன்றியக் கவுன்சிலர் சுமித்ரா உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர். பூங்குடி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பூங்குடி கிராமத்தில் சுதந்திரத் தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா பங்கேற்றார்.  பின்னர் ஆட்சியர் பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இக்கூட்டங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி, பேருந்து வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.