திருச்சிராப்பள்ளி, மே 7- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-ஆவது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் வியாழனன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகே~;பொய்யாமொழி, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்று பேசினார். அகில இந்திய வணிகர்கள் சம்மேளன (சிஏஐடி) தேசியத்தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மூத்த வணிகர்களுக்கு வ.உ.சி வணிகச்செம்மல் விருதுகளை வழங்கி, நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு க.மோகன் நினைவக கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது : ‘‘வணிகர் நல வாரியத்தில் 84 ஆயிரத்து 101 உறுப்பினர்கள் உள்ளனர். 2021 ஜூன் இணையவழியில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இதில் 39 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பின் வணிகர்களின் சிரமங்கள் ஜி.எஸ்.டி கவுன்சிலில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் கீழ் படிவம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வணிகர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உறுப்பினர் இறப்புக்கான குடும்பநல இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், தீ விபத்தில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி இழப்பீடு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிக இடங்களில் உள்ள வாடகை பிரச்சனைகளை தீர்க்க கொள்கை வழிமுறைகளை வகுக்க நகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு அமைக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு ஓர் ஆண்டுக்கு ஒருமுறை வணிக உரிமம் எடுப்பதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் பெறும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றார். மாநாட்டில், வணிகர் நலவாரியம் செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி கடைகள் வாடகை முரண்பாடுகளை நீக்கி, தற்போது உள்ள கடை உரிமையாளர்களின் பெயரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தயாரிப்பு நிலையிலேயே தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும், வணிகர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், மாநிலதுணைத்தலைவர்கள் எஸ்.கந்தன், கே.எம்.ஸ்.ஹக்கீம், மாநில இணைச்செயலாளர் ராஜாங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.