districts

img

புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி

புதுக்கோட்டை, நவ.17 - மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் 67.83 கோடி ரூபாய் செலவில் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமையன்று திறந்து வைத்தார். 

தமிழ்நாட்டின் மூன்றாவது பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 70 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் 2023-2024 ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. 

இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டடம், மாணவ-மாணவியர் விடுதிக் கட்டடம், ஆசிரியர், முதல்வர் தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ரூ.5.10 கோடி மதிப்பில் தேவையான அதிநவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர், நிர்வாகம் மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 காலிப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 

பொது சுகாதாரத்துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு என மொத்தம் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 27 புதிய கட்டடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டையிலிருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.நவாஸ்கனி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை, வை.முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.டி.எஸ். செல்வவிநாயகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தலைமைச் செயலகத்திலிருந்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.