districts

போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

விருதுநகரில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

விருதுநகர், மே 12- சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தால் 621 சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. வரும்  ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடை பெற உள்ளது. இத்தேர்வுக்கான தககுதி பட்டப்படிப்பு தேர்ச்சி, வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள். தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு மற்றும் மாதி ரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடைபெற்று வரு கிறது. தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை நேரில் தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.  கூடுதல் விவரங்கள் அறிய மின்னஞ்சல் முகவரிகள்: www.www.tnusrbonline.org https://t. me/vnrstudy circle, studycirclevnr@gmail.com.

கல்வி உதவித்தொகையை  எளிதில் பெற பள்ளிகளிலேயே அஞ்சலக வங்கிக் கணக்கு

விருதுநகர், மே 12- ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிகழாண்டில் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்பு டன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது,  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி  ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்  கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் எனத்  தெரிவிக்கப் பட்டுள்ளது. 

வீட்டில் பதுக்கிய  150 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் 

வெம்பக்கோட்டை,  மே 12- விருதுநர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதியில் சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக  வெம்பக்கோட்டை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல்துறையினர் சோதனை நடத்திய தில் தாயில்பட்டி டி.ராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த அன்புக்கரசன் (52), ராமமூர்த்தி (44), பாண்டியராஜ் (51) ஆகியோர் வீட்டில் அரசு அனுமதி இல்லாமல், எளிதில் தீப்பற்றக்கூடிய மருந்து செலுத்திய வெள்ளைத் திரிகள் மற்றும் சுமார் 150 கிலோ எடை கொண்ட வெடிகள் வைத்தி ருந்தது தெரியவந்தது.  அவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறைனர் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர்.  

மே15-இல் விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் மின் தடை

விருதுநகர், மே.12- விருதுநகர் மற்றும் மல்லாங்கிணறு துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வரும் மே15-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இந்தப் பகுதிகளிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான இராம மூர்த்தி சாலை, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி சாலை, படேல் சாலை, ஏ.ஏ.சாலை, பேராலி சாலை, தந்திமரத்தெரு, எல்.ஐ.ஜி காலனி, பேராசிரியர் காலனி, கால்நடை மருத்துவமனை சாலை, இரயில்வே பீடர் சாலை, எல்.பி.எஸ்.நகர் மெயின் பஜார் வடக்கு, காசுக்கடை பஜார், காந்திபுரம் தெரு, மணி நகரம், அழகர்சாமி தெரு, கந்தபுரம்தெரு பகுதிகளிலும் நாகம்பட்டி, நந்திகுண்டு, மல்லாங்கிணறு, அழகிய நல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, வலுக்க லொட்டி, மேலதுலுக்கன்குளம், வரலாட்டி ஆகிய பகுதி களில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை  மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மோக்கா புயல் : இராமேஸ்வரத்தில் சூறைக் காற்று

இராமேஸ்வரம், மே 12-  வங்கக் கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் காரணமாக இராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை சூறைக் காற்று வீசியது. பாம்பன் துறைமுத்தில் இரண்டாவது நாளாக இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய தற்போது மோக்கா புயலாக நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு தொலை தூர  எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.  இந்த நிலையில், தனுஷ்கோடி, இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம்  கடலோரப் பகுதிகளில் வழக் கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து சூறை காற்று வீசிவருகிறது. இதனால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை பாதுகாப்பு டன் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தமபாளையத்தில் 16-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி,மே.12- கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 16-ஆம் தேதி உத்தமபாளயம் வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் என கோட்டாட்சியர் இரா.பால் பாண்டி தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான மே-2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் முகாம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலு வலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்க ளால் மே 16-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடை பெறவுள்ளது. உத்தமபாளையம் கோட்டத்திற்குட்பட்ட விவசாயி கள் முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து  பயன் பெறலாம்.;

அசந்து தூங்கிய காவலாளி மூக்கைக் கடித்தது யார்? 

ஒட்டன்சத்திரம், மே 12-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் மருத்துவமனையில் இரவு நேரத்தில் காவல் காத்த காவலாளியின் மூக்கை கடித்து துப்பிய மதுபோதை ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். ஒட்டன்சததிரத்திரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாலைப்புதூரைச் சேர்ந்த கந்தசாமி (65) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரவு நேரக் காவல் பணியில் இருந்தபோது தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மதுபோதை ஆசாமி ஒருவர்  கந்தசாமியின் மூக்கை கடித்து துப்பிச்சென்று தப்பி ஓடிவிட்டார். படுகாயத்துடன் துடித்த கந்தசாமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நெட் தேர்விற்கு பயிற்சியளிக்கிறது மூட்டா

மதுரை, மே 12- மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) ஆகியவை ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தகுதித் தேர்வு தாள்-I (கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறன்) இலவசப் பயிற்சி வகுப்புகளை மே 17-ஆம் தேதி  முதல் 10 நாட்கள் நடத்துகின்றன. வகுப்புகள் மதுரை காக்காதோப்பில் உள்ள மூட்டா அலுவலகத்தில் மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும். (ஞாயிறு தவிர), ஆர்வமுள்ளவர்கள் google வலைதளம் https://forms.gle/yw3AvMFiyuEaJZtK8 மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெயர், பாடம், நிறுவனம், தொடர்பு எண் மற்றும் வாட்ஸ்அப் எண் உள்ளிட்ட விவரங்களை மே 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிப்பிற்குத் தேவை யான இதர பொருட்களுக்கு ரூ.600 செலுத்த வேண்டும்.