மயிலாடுதுறை, ஜன.28 - தமிழ்நாட்டில் 100 ஆண்டுகள் பழமையான சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலை அடுத்த பரசலூர் ஊராட்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த அலுவலகம் மூலம் செம்பனார்கோயில், பரசலூர், மேமாத்தூர், கீழையூர், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர், ஆறுபாதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் பழமையான இந்த கட்டிடம் பழுதடைந்ததால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து நிர்வாகம் மற்றும் நிதித்துறையின்கீழ் ரூ.1.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.