தஞ்சாவூர், அக்.17 - தஞ்சாவூரில் ரூ.9.58 கோடியில் புதிய மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் கீழவாசலில் இருந்த மீன் சந்தை இடிக்கப்பட்டு கொண்டிராஜ பாளையத்தில் தற்காலிக மீன் சந்தை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழவாசலில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக பல்வேறு வசதிகளுடன் ரூ.9.58 கோடியில், புதிய மீன் சந்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். இதில் எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மகனி, உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, கலையரசன், மாமன்ற உறுப்பினர்கள் உஷா, அண்ணா.பிரகாஷ், ஷெரீப், காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய மீன் சந்தை 4,600 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளத்துடன் அமைய உள்ளது. தரைத் தளத்தில் 95 இருசக்கர வாகனங்கள், 28 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். மேலும் லாரிகளை நிறுத்தவும் வசதி உள்ளது. முதல் தளத்தில் 71 கடைகள் அமைய உள்ளன. குடிநீர், கழிப்பறை வசதிகளும், வாகனங்கள் எளிதாக வந்து செல்ல இரண்டு வழியும் ஏற்படுத்தப்படும். இந்த புதிய மீன்சந்தை ஓராண்டு காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.