districts

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 - திருச்சி மாவட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வரவேற்றார்.  விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்  3,175 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 15 லட்சம் மதிப்பில் வேளாண் பொருட்கள், கருவிகள், நரிக்குறவர்களுக்கு பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.  வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த 6 மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு ஏற்கனவே ரூ. 90 உயர்த்தி வழங்கி உள்ளார். ஒன்றிய அரசு இப்போது உயர்த்தியுள்ளது. மேலும் விலை உயர்த்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்” என்றார். நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பயிர் காப்பீட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்ல முடியாது. காவிரி ஆற்றில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.  இப்போது முதல் போக சாகுபடிதான் நடக்கிறது. இரண்டாம் போக சாகுபடிக்கு அனைத்து கிளை வாய்க்கால்களில் தேவையான அளவு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். விழாவில் எம்.எல்.ஏக்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், அப்துல் சமத், மேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் அதிகாரி மல்லிகா நன்றி கூறினார்.