கும்பகோணம், மே 27-
உழைக்கும் மக்களின் உரிமைக்காக தமிழ்நாட்டின் ஏழு முனைகளிலிருந்து 2100 கிலோமீட்டர் தொலைவிற்கு சிஐடியு பிரச்சார நடைபயணக் குழு தொழிலாளர் நலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இதனொரு பகுதியாக கடலூரில் இருந்து துவங்கிய சிஐடியு நடைபயண பிரச்சாரக் குழுவிற்கு தஞ்சை மாவட்ட வடக்கு எல்லையான திருச்சேறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் வாண வேடிக்கைகளுடனும், பறை இசையுடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக பயண குழு தலைவர் கே.திருச்செல்வம், பயண குழு கன்வினர் சி.ஜெயபால் உள்ளிட்ட குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் திருச்சேறை, செம்மங்குடி, நாச்சியார்கோவில் திருநாகேஸ்வரம், திருபுவனம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு நடைபயண பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நடைபயணத்தில் சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் கண்ணன், துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.