districts

img

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.30-  தமிழ்நாடு முதலமைச்சர் 2021 சட்டமன்ற தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். தற்போது சத்துணவு திட்டத்தில் உள்ள 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடிந்தவர்களுக்கு சிறப்பு தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும். ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புதனன்று மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் சேட்டு முகமது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட துணைத் தலைவர் சாந்தி, மாவட்ட இணை செயலாளர்கள் மல்லிகா, சசிகலா, சந்திரா, பிச்சாயி ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சகாயராஜ், அனைத்துத்துறை ஓய்வுதியர் சங்க மாவட்டத் துணை தலைவர் சிராஜுதீன், தமிழ்நாடு அரசு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் நவநீதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் கிரேஸி லில்லி நன்றி கூறினார்.