திருச்சிராப்பள்ளி, அக்,19- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல், உணவகம் மற்றும் டிபன் ஸ்டால் (சைவம் மற்றும் அசைவம்) உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக திருச்சியில் நடத்தது. இக்கூட்டத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை வகித்து பேசியதாவது: உணவகங்கள், உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் மற்றும் பதிவு பெற்றிருக்க வேண்டும். அதை உணவகத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படி காட்சிப்படுத்த வேண்டும். சவர்மா, கோழி, ஆட்டு இறைச்சி கள் தினந்தோறும் சமைத்து விற்பனை செய்ய வேண்டும். கெட்டுப்போன மற்றும் சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சமையல் செய்யும் இடங்களை சுத்தமாகவும், கழிவுநீர் தேங்காத வண்ணமும் வைத்திருக்க வேண்டும். அதிக நிறமிகள் கலந்து உணவு தயாரிக்கக் கூடாது. உணவகத்தில் போதிய பதிவேடுகள் வைத்திருக்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தபட வேண்டும் மறுமுறை பயன்படுத்தக்கூடாது என்றார்.