மயிலாடுதுறை, நவ.10- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அருண் (38). இவர் கவிராஜ், சுப்பிரமணி, மணிவேல் ஆகிய மீனவர்களுடன் வியாழனன்று மதியம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். வெள்ளியன்று அதிகாலை 5 மணியளவில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் அருண் உடல்கருகி படகிலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பினர். குட்டியாண்டியூர் பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கு சொந்தமான படகில் வெள்ளியன்று அதிகாலை 2 மணியளவில் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு, அதிகாலை 5 மணியளவில் கரை திரும்பிக் கொண்டிருந்தார் மீனவர் ராஜேந்திரன் (46). மின்னல் தாக்கியதில் இவரது கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சக மீனவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கடலோர காவல் குழும காவல்துறை மற்றும் பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த மீனவர் அருணுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.