districts

திருச்சி முக்கிய செய்திகள்

பயிரை காப்பாற்ற வடிகால் வசதி:விவசாயிகள் மகிழ்ச்சி 

தஞ்சாவூர், டிச.3 - 
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சியில் வடிகால் வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால், தொடர்மழை காரணமாக சுமார் 10 ஏக்கருக்கு மேலான சம்பா நடவுப்பயிர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருந்தது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேரிடர் மேலாண்மை குழு, வேளாண்மை துறை அலுவலர்கள், வட்டாட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்த நிலையில் உடனடியாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மழை நீரில் மூழ்கியிருந்த நெல் பயிரை காப்பாற்ற வடிகால் வசதி ஏற்படுத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வடிகால் வசதி செய்து தந்த வருவாய் துறையினர், வேளாண் துறையினர், காவல் துறையினருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வி.ஆர்.கே. செந்தில்குமார் நன்றி தெரிவித்துஉள்ளார். தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருந்த பயிர்கள் காப்பாற்றப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாலிபர் சங்க திருவாரூர்மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
திருவாரூர், டிச.3 -
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சிறப்பு கூட்டம் சிபிஎம் மாவட்டக் குழு அலுவல
கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித்தார். ஸ்தாபனம் மற்றும் 2024 உறுப்பினர் பதிவு, டிச.22,23,24 ஆகிய மூன்று தினங்கள் இருசக்கர வாகன பிரச்சார பயணம், டிசம்பர்  24 அன்று மாநிலம் தழுவிய வெண்மணி கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் பேசினார்.

மாவட்டப் பொருளாளராக கே.எம்.பாலா மற்றும் மாவட்ட துணைத் தலைவர்களாக எஸ்.ராஜா, எம்.சரவணன், இணைச் செயலாளராக கே.இளையராஜா மற்றும் புதிய மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா
கும்பகோணம், டிச.3 -
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உலக 
மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் கும்பகோணம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பாஸ், ரயில் பாஸ் பிற சலுகைகள் செலவில்லாமல் பெற்றுத் தரும் நிகழ்வின் நூறாவது வார நிறைவு விழா கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ் சர்ச் வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு மாநகரச் செயலாளர் பழ.அன்புமணி தலைமை வகித்தார். முன்னதாக சங்க கொடியை மாவட்ட இணைச் செயலாளர் ஜி.சரவணன் ஏற்றினார். மாநகரப் பொருளாளர் ஆர்‌.ராஜேஸ்வரி வரவேற்றார். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.‌மனோகரன் துவக்கவுரை ஆற்றினார். கும்பகோணம் தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவர் பிரபாகரன், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ரா.பொன்முடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் தாமோதரன் நன்றி கூறினார்.

கைதாங்கி வழங்கல்
புதுக்கோட்டை, டிச.3 -
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 525 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மேலும், விராலிமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுந்தரராஜன் கைதாங்கி வேண்டி கோரிக்கை மனு அளித்ததைத் தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் அவருக்கு கைதாங்கியை ஆட்சியர் வழங்கினார்.
 

தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து 
பெரம்பலூர், டிச.3-ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆம்னி பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். செவ்வாயன்று நண்பகல் 12 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூர், தண்ணீர் பந்தல் பகுதியில் ஆம்னி பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்துக்கு உள்ளேயே சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. புகை வந்ததும் பேருந்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் கீழே இறங்கி விட்டதால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. பெரம்பலூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.