districts

img

புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பாபநாசம், ஆக.25 - போக்குவரத்திற்கு பயனற்று கிடக்கும்  சாலைக்குப் பதிலாக புதிய சாலை  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடக் கரையை ஒட்டி யுள்ளது கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் பட்டுக்குடி தொடங்கி புத்தூர் வழியாக, குடிகாடு வரை  5 கிலோ மீட்டரில் சாலை படுமோசமாக, பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக உள்ளது. இந்தச் சாலையை ஊராட்சி மக்கள் மட்டுமல்லாது, அருகிலுள்ள வீர மாங்குடி, உம்பளாப்பாடி ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாத  நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொழில், வேலைவாய்ப்பு,  கல்விக்காக கரையை கடந்து வரு கின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உற வினர்கள் அதிகம் உள்ளனர். கொள்ளி டம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சமயங்க ளில், இந்தச் சாலை அரிக்கப்பட, உடைப்பெடுக்க வாய்ப்புண்டு.  இதனால் பட்டுக்குடி முதல் குடிகாடு வரை 5 கிலோ மீட்டர் சாலையை தரமாக  போட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சாலை போக்குவரத்திற்கு, விவசாயப் பணி களுக்கு பிரதானமாக இருப்பதால், சாலையை விரைந்து தரமாக போட வேண்டும். இச்சாலையின் இரு புறமும்  பள்ளத்தில் வீடுகள் உள்ளன. சாலையில்  புதிதாக வரும் வாகன ஓட்டிகள் சற்றுத் தடுமாறினால்கூட பள்ளத்தில் விழ நேரிடும்.  தமிழக முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் அல்லது எம்.பி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தாவது இந்தச் சாலையை விரைந்து போட வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். சாலை அமைக்கும் விஷயத்தில் அரசு விரைந்து முடிவு எடுக்குமா?