புதுக்கோட்டை, மே.1- மக்கள் பயன்படுத்தும் அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும் 15 தினங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்பொழுது நிலவிவரும் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் குடிநீருக்கே அவதிப்படும் சூழல் உள்ளது. குளங்களும், கிணறுகளும் முற்றாக வறண்டுவிட்ட நிலையில் மக்கள் குடிநீருக்கு உள்ளாட்சி நிர்வாகத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையே நம்பி உள்ளனர். அதிலிருந்தும் தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வரும் நீர் சுத்தமாக இருப்பதில்லை என்ற புகாரும் பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டு இருக்கின்றன. சமீபத்தில் கந்தர்வகோட்டையை அடுத்த சங்கம்விடுதி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாக தகவல் பரவி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தக் குடிநீரை ஆய்வு செய்தபோது அது மாட்டுச்சாணம் இல்லை. தொட்டியை பல மாதங்கள் சுத்தம் செய்யாததால் சேர்ந்த குப்பைதான் அது எனத் தெரிய வந்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் நிலை இதுவாகத்தான் உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 தினங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து குளோரிங் பவுடர் தெளிக்க வேண்டும் என்பதை எந்த உள்ளாட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. இதனால், மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மக்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கும் ஆளாகும் ஆபத்தும் உள்ளது. குடிநீர்த் தொட்டிகளுக்கு பூட்டுப்போடுக குடிநீர்த் தொட்டி விசயத்தில் மாவட்ட நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும் 15 தினங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து குளோரிங் பவுடர் கலப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்தத் தொட்டிகளில் வேறு நபர்கள் மேலே ஏறிச்செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகளை ஏற்படுத்தி பூட்டுப் போட வேண்டும். புதிய குடிநீரத் தொட்டிகள் அமைக்கும் போது கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொட்டிகளில் பாசனம் பிடிக்காத அளவுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்சாரத்துக்காக சோலார் பிளாண்ட் அமைக்கப்படுகிறது. அப்படி அமைக்கும் போது அது விவசாயத்தையும், விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.