அரியலூர், செப்.9 - ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை 108 ஆம்புலன்ஸில் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 108 ஆம்புலன்ஸில் காலிப் பணியிடங்களை நிரப்ப முதற்கட்ட நேர்முகத் தேர்வு செப்.10 (செவ்வாய்) அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது. வயது, கல்வித் தகுதி இதில் மருத்துவ உதவியாளருக்கு தேவையான கல்வி மற்றும் தகுதிகள், நேர்முகத் தேர்வுக்கு வருபவர்களின் வயது - 19 வயதுக்கு மேல், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதியானது - பிஎஸ்சி நர்சிங் ஜி.என்.எம், (12 ஆம் வகுப்பு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி - இவைகளில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள துறையின் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.16020 வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு உண்டான தகுதிகள் - கட்டாயம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும், 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். பேட்ச் எடுத்து ஓராண்டு முழுமை பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை - முதல் கட்டமாக எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு ஆகிய தேர்வுகளில் அனைத்திலும் வெற்றி பெற்றவர்களுக்கு மாதச் சம்பளமாக மொத்தம் ரூ.15820 வழங்கப்படும். அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு உண்டான தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் 12 மணி நேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது கல்வித் தகுதி, ஓட்டுநர் உரிமம், முகவரி சான்று, அடையாளச் சான்று ஆகியவைகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும். மேலும் இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 9154250969 என்ற கைபேசி எண்ணிற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.