districts

img

காலிப் பணியிடங்களை நிரப்புக! நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, டிச.10 - சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார்.

வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் எம்.ஏழுமலை சமர்ப்பித்தார்.  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்களை விரைவாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் பணியினை டெல்டா அல்லாத மண்டலங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பிற்கு ஒதுக்கீடு செய்வதை ரத்து செய்ய வேண்டும்.

திருச்சி மண்டலம் இண்டேன் எரிவாயு பிரிவில் நீண்ட காலமாக சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கக் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு கூலி ரூ. 33.43 உயர்த்தி வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களாக பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அடுத்த நிலைக்கான அட்டை வழங்காத பணியாளர்களுக்கு உடனடியாக அட்டை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி செய்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கருணை ஓய்வூதியம் ரூ.9000/- வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாநிலச் செயலாளர் ராசப்பன், மாநில நிர்வாகிகள் சுப்புராஜ், சண்முகம் ராஜாங்கம், கதிரேசன் உள்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.