தஞ்சாவூர், ஆக.16 -
ரேசனில் தேங்காய் எண்ணெய்யை அரசு விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் 25 கிராமங்களின் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் சுமார் 1.30 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கஜா புயலுக்கு முன்பு வரை தேங்காயின் விலை அதிகமாக இருந்ததால், தென்னை விவசாயிகளுக்கு பெரியளவில் வருவாய் கிடைத்தது. கஜா புயலுக்கு பிறகு தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தேங்காய் விலையும் சரிவை சந்தித்தது. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்நிலையில், தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும்.
ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யை அரசு விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், தேங்காய் உடைக்கும் போராட்டம் என அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தென்னை விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபைக் கூட்டங்களில், தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகளில் அரசு விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றக் கோரி, பேராவூரணியை சுற்றியுள்ள குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், நாடியம், வீரியங்கோட்டை, பள்ளத்துார், முடச்சிக்காடு, மணக்காடு, செருவாவிடுதி உள்ளிட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலர்களிடம் மனுவாக அளித்தனர்.