districts

img

பெரம்பூரில் தான கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூலை 2- புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், பெரம்பூர் கிராமத்தில் ஒருவரின் தோட்டத்தில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு தானக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரம்பூர் ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக பிரணவ கார்த்திக் என்பவர் தகவல் அளித்தார். அதன்பேரில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் சுப.முத்தழகன் தலைமையில், தொல்லியல் ஆர்வலர்கள் முருகபிரசாத், நாராயண மூர்த்தி, முகுல் பிரசாத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து பேரா. சுப.முத்தழகன் கூறியதாவது: ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் உள்ள கல்வெட்டு 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்ட கற்பலகையில், சோறன் குன்றன் என்னும் நாடாழ்வார் ஒருவருக்கு வீடும், வாசலும் சுனையக்குடி ஊர்க்காரர்களால் வழங்கப்பட்ட செய்தி எழுதப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டுப் பலகை, பெரம்பூர் அய்யனார் கோவிலுக்கு கிழக்கே உள்ள குருந்தங்காட்டில் நட்டு வைக்கப்பட்டுள்ளதாக பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், ராஜராஜன், ராஜ்குமார் ஆகியோர் அளித்த தகவலை அடுத்து அங்கும் ஆய்வு செய்தோம். அது, 2 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 4 வரிகளில் இருந்தது. இந்தக் கல்வெட்டில் அகழாபாணன் என்பவர் கிணறும், தோட்டமும் தானமளித்த செய்தி எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் இருபுறமும் மங்கல சின்னமான குத்துவிளக்குகள் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. இவ்விரு கல்வெட்டுகளும் உள்ள பகுதியில் பானை ஓடுகள், கல்செக்கு, உரல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த இடமானது இடைக்கால மக்கள் வாழ்விடமாக இருந்திருக்கலாம். கல்வெட்டுகளின் எழுத்தமைதியை கொண்டு அவை கி.பி 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்விரண்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிற்கால பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் காவல் அமைப்புகள் பல உருவாகின. இவர்கள் ஊர்களுக்கும், தனிமனித உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளித்தது குறித்தும், அதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட சன்மானங்கள் குறித்தும் பல கல்வெட்டுகள் மாவட்டம் முழுவதும் கிடைக்கப் பெறுகின்றன. முதல் கல்வெட்டில் உள்ள சோறன் குன்றன், சுனையக்குடி எனப்படும் இன்றைய செனயாக்குடி கிராமத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சன்மானமாக வீடும் வாசலும் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். மேலும் சோறன் குன்றன் என்னும் பெயர் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கிள்ளனூர் நடுகல் வீரர்களின் பெயர்களை ஒத்து உள்ளது. இந்தக் காவல் பணிகளின் நீட்சியாக, இவ்வூரில் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவின் போது ஊர் ஆண்கள் அனைவரும் வீரர்கள் கைகளில் ஏந்தும் ஈட்டி போன்ற மூங்கில் கம்புகளுடன், அணிவகுத்து செல்லும் பிலி சோறு எறிதல் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

;