சிதம்பரம், டிச.30- சிதம்பரம் ஆன்மீக சுற்றுலா நகரமாகும். இங்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் நடராஜர் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார்பேட்டை கடற்கரை என பல்வேறு இடங்க ளுக்கும் செல்கிறார்கள். இதனால் சிதம்பரம் நகரத்திற்கு பேருந்து, வேன்,கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் ஆயிரகணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். வாகனத்தை முறையாக நிறுத்த இடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளம் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிதம்பரத்திற்கு வருகின்றனர். இதனால், வழக்கத்தை காட்டிலும் கூட்டம் அலைமோதுகிறது, நடராஜர் கோயிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் அதிகாலை 3 மணி முதல் கழிவறை, குளியலறை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த லட்சுமி தேவி கூறுகையில், இரவு முழுவதும் பேருந்தில் பயணம் செய்து கோவிலுக்கு வந்தோம். குளிப்பதற்கு கீழவீதியில் உள்ள நகராட்சி கழிவறை மற்றும் குளியல் அறைக்கு சென்றோம். அங்கு 100-க்கும் வரிசையில் காத்திருந்தனர். குளிப்பது கூட தாமதமாகலாம். ஆனால், இயற்கை உபாதையை கழிப்பதற்கும் அவசரத்திற்குகூட ஒதுங்க இடம் இல்லாமல் சுமார் 50 நிமிடத்திற்கு மேலாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று அவதிப்பட்டதையும் ஒரு மணி நேரம் காத்திருந்து சென்ற போது, கழிவறைகள் சுகாதாரம் இல்லாமல் ஓட்டை உடைசல் இருந்ததாகவும் கூறினர். நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்களை கருதி, இயற்கை உபாதை மற்றும் குளியல் அறைகள் கட்டி கொடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி கூறினார்.