புதுக்கோட்டை, மே 2:- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும் என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை.மாலை நடைபெற்ற விழாவில், முதலாம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகளை 10 படைப்பாளர்களுக்கு வழங்கி அவர் பேசியதாவது: விருதுகள் கொடுத்து படைப்பாளர்களைப் பாராட்டுவது என்பது, அவர்கள் தொடர்ந்து மனித சமுதாயத்துக்காக எழுத வேண்டும் என்பதற்காகத்தான். ரஷ்ய நாட்டில் அந்த நாட்டின் பிரபலமான சர்க்கஸ் கலைஞர்களுக்கு எல்லா வகையான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வாறு படைப்பாளிகள், கலைஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே ஊக்குவிக்கப்பட வேண்டும். மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் இல்லாதபோது புலம்பிப் பயனில்லை. இந்தச் சமூகத்தை மாற்றியமைப்பது குறித்து படைப்பதற்காக படைப்பாளிகள் எத்தனைத் தரவுகளைப் படித்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோல, படைப்பாளிகளும் விமர்சனங்களை அஞ்சாது எதிர்கொள்ள வேண்டும். என் எழுத்து, வாசகனை ஏதாவது செய்ய வேண்டும். அவனை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் அல்லது எரிச்சலூட்ட வேண்டும் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன். அதுபோல, உங்களின் எழுத்துகளும் வாசகனை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும். அப்படியான படைப்புகளை நீங்கள் படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.. விழாவுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்தார். விருதுகள் குறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி அறிமுகவுரை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா. முத்துநிலவன், கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக தமிழ்ச் சங்கச் செயலர் மகாசுந்தர் வரவேற்றார். முடிவில் துணைச் செயலர் சு. பீர்முகமது நன்றி கூறினார்.