திருச்சிராப்பள்ளி, டிச.7 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 24 ஆவது மாநாடு டிசம்பர் 7, 8 தேதிகளில் திருவெறும்பூரில் நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை (டிச.7) மாலை திருவெறும்பூர் மலைக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கிய செம்படை பேரணி மாநாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தியாகிகள் நினைவுச் சுடர்
பொன்மலையிலிருந்து, பொன்மலை பகுதி செயலாளர் டி.விஜயேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மகேந்திரன் தலைமையில் கொண்டு வரப்பட்ட பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை தோழர் சேது அம்மாள் எடுத்துக் கொடுக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ. வெற்றிச்செல்வன் பெற்றுக் கொண்டார். கடந்த மாநாடு நடைபெற்ற எடமலைப்பட்டி புதூரில் இருந்து மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வேலுச்சாமி தலைமையில் கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை கீழபுதூர் ஆனந்தன் எடுத்துக் கொடுக்க, அதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரேணுகா பெற்றுக் கொண்டார்.
திருவெறும்பூர் பாரத் மஹாலில் தோழர்கள் பன்னீர்செல்வம்-பொன்மாலா நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்தது. தோழர்கள் எஸ்.ஆர்.பாலன், எஸ்.நல்லான் நினைவரங்கத்தில் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.லெனின் தலைமையிலான குழுவினர் தலைமை வகித்தனர்.
மாநாட்டு கொடியை மூத்த தோழர் பி.சுப்பிரமணியன் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கார்த்திகேயன் வாசித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் கே.சி. பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் துவக்க உரையாற்றினார். அரசியல், ஸ்தாபன - வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வாசித்தார். வரவு -செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்கராஜன் சமர்ப்பித்தார்.
நூல் வெளியீடு
மாநாட்டில் தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய “செங்கொடி ஏந்திய பன்முக வித்தகர் தோழர் கே.வரதராஜன்” என்ற நூல் வெளியிடப்பட்டது. பின்னர் மூத்த தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.