districts

img

ஊழித் தாண்டவத்தில் உருகுலைந்து போன ஊராட்சி மீட்டெடுத்த சிபிஎம்

ஆழிப்பேரலை ஊழித் தாண்டவம் ஆடி உருக்குலைந்து போன தமிழக கடலோர கிராமங்களில், 19 ஆண்டுகள் சுமக்க முடியாத துயரங்களுடன் கடந்து வந்த பாதையில், ஓடி வந்து உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கிராமத்திற்கு உதவிய வரலாற்றுச் சுவடு. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் என்கிற கடலோர கிராமம் ஆழிப் பேரலையின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானது. 2004 டிசம்பர் 26 இல் எழில் கொஞ்சும் கடலோர கிராமம் சிதைந்து போனது. 38 மனித உயிர்களை எடுத்துக் கொண்டது. ஏராளமான கால்நடைகள் கடல் நீருக்கு இரையானது.  விவரிக்க முடியாத வேதனைகளும், ரணங்களும் இன்னும் மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது. கடலையும் மீனவ மக்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அப்படித்தான் ஆழிப் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளாகி, அதில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீட்டெடுப்பது என்பதும். டிசம்பர் 25 வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வந்த சிபிஎம் தலைவர்களில் ஒரு சிலர் நாகையில் தங்கியிருந்தனர். அப்படி தங்கியிருந்த தலைவர்களில் ஒருவர், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன். கீழவெண்மணி குறித்த ஆவணப்படத்தின் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கடல் அலை கிராமத்திற்குள் சூழ்ந்த ஒரு சில மணி நேரங்களில், சிபிஎம் தலைவர்கள் எல்லா கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். தோழர் ஜி.ஆர் 11 மணிக்கு காமேஸ்வரம் கிராமத்து மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னார். அப்போது மக்களுக்கு ஆறுதலை விடவும் பேரிழப்பை ஈடு செய்ய உதவிகள் தேவைப்பட்டதை உணர்ந்து, கட்சியின் அனைத்து வெகுஜன இயக்கங்களுக்கும் தகவல் தெரிவித்து உதவுவதற்கு ஏற்பாடு செய்தார்.

கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் நிவாரண முகாமாக மாறியிருந்தது. நிவாரணப் பொருட்கள் மாவட்டக் குழு அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நாகை நகரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் உள்ளிட்ட அனைத்து வெகுஜன இயக்க தோழர்களால் நிரம்பி வழிந்தது. வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் மீட்பு  பணிக்கு இவ்வளவு ஊழியர்களை களம் இறக்கவில்லை.  இந்த ஊராட்சியில் மீனவர்கள், விவசாயிகள் என இரண்டு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் உள்ளிட்ட அனைவரிடமும் உதவிகளைக் கேட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படையான பொருட்கள் அனைத்தும் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட்டன. அமைக்கப்பட்டிருந்த அனைத்து முகாம்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.  மீட்பு பணிக்கு வந்த வெளி மாவட்ட தோழர்கள் உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் இல்லாமல், மண்ணில் புதைந்து கிடந்த பிணங்களைப் புரட்டி எடுத்து எரியூட்டியும், புதைத்தும் கொண்டிருந்தனர். ஆனால் எவ்வித சோர்வும் இல்லாமல் அப்படி செய்ய வைத்தது மார்க்சியம் எனும் மானுட தத்துவம் என்றால் அது மிகையல்ல. 

நாகை மாவட்டத்தின் அனைத்துக் கடலோர கிராமங்களிலும் நமது தோழர்கள் களமாடிக் கொண்டிருந்தனர். அப்போது நிவாரணப் பணிக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராதா கிருஷ்ணன் இஆப (பின்பு அவரே நாகை மாவட்ட ஆட்சியராகவும் இருந்தார்) நமது வர்க்க வெகுஜன அமைப்புகளின் பெயரைச் சொல்லி பாராட்டினார்.  காமேஸ்வரம் புயல் வெள்ளப் பாதுகாப்பு மைய கட்டிடத்தில், வெளி மாவட்டத்தில் இருந்து வந்த  50-க்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கியிருந்து மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். ஒரு மாதம் கடந்தும் அப்பணி தொடர்ந்தது. நம் முகாமிற்கு தினசரி நமது தலைவர்கள் வந்திருந்து நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தும், எப்படிப்பட்ட உதவிகள் மக்களுக்கு போய் சேர வேண்டும், அதற்கான நிவாரணப் பொருட்களை எங்கிருந்து வர வைக்க வேண்டும் என்றும் ஆலோ சித்து இரவு-பகல் பாராமல் பணி யாற்றிக் கொண்டி ருந்தனர். முதலில் மீட்பு பணி, பின்பு நிவாரண பணி, மறுக்கட்டமைப்பு பணி, புனரமைப்பு பணி, மனநல ஆலோசனைப் பணி இப்படி பல கட்டமாக ஒரு வருடத்திற்கும் மேலாக தோழர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அனைத்து மட்டத்திலும் மக்களுக்கு உதவிகள் சென்று கொண்டிருந்தன. சுருங்கச் சொல்வ தென்றால், பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட கடலோர கிராமங்களை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தத்தெடுத்திருந்தது.

காமேஸ்வரத்தில் கல்விப் பணி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்விப் பணியை மேம்படுத்துவதற்காகவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் தோழர் ஜி.ஆர் அவர்களின் மிகப்பெரிய முயற்சியால் காமேஸ்வரம் தூய செபஸ்தியார் உயர்நிலைப் பள்ளிக்கு, மேற்குவங்க மாநில அரசுடன் பேசி ரூ.10 லட்சம் நிதி உதவி பெற்று, பாதிக்கப்பட்ட மக்களின் கல்வி அறிவுக்காக பள்ளி கட்டிடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டிக் கொடுத்தது. வேறு எந்த அரசியல் கட்சியும் செய்ய முடியாத வரலாற்றுச் சாதனையை சிபிஎம் செய்து முடித்தது என்று மக்கள் பாராட்டினர். இப்போது அப்பள்ளியானது நாகை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பள்ளிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அனைத்து ஆண்டுகளிலும் நூற்றுக்கு நூறு என்ற மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை அப்பள்ளி செய்து வருகிறது. தற்போது அந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக மாற்றமடைந்து, மக்களுக்காக கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு குக்கிராம பள்ளியிலிருந்து இன்று பல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், உருவாகி இருக்கிறார்கள் என்றால், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.  காமேஸ்வரம் ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நான்கு இடங்களில் கல்விக் கூடங்கள் அமைத்து இரவுநேர பாடசாலையை துவக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார்கள். 

மீனவர்களுக்கான  சமுதாயக் கூடம்

முற்றிலும் பாதிப்புக்கு உள்ளான மீனவ பகுதி மக்களின் சார்பாக, இதுபோன்ற பேரிடர்  காலங்களில் அனைத்து மக்களும் தங்கிக் கொள்வதற்கு ஒரு சமுதாயக்கூடம் வேண்டும் என்ற கோரிக்கை கட்சித் தலைவர்களிடம் முன் வைக்கப்பட்டது. அதற்கும் ஜி.ராமகிருஷ்ணனின் முன்முயற்சியால் மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிற மகாராஷ்டிரா ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் மூலம், தொழிற்சங்கங்களின் உதவியை பெற்று ரூ.6 லட்சம் அளவில் காமேஸ்வரம் மீனவர் காலனி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.  இப்போது அந்த கிராமத்திற்கு சென்றாலும், கம்யூனிஸ்ட் சமுதாயக் கூடம் என்று மக்கள் அடையாளம் காட்டுகின்றனர்.  பேரிடர் காலங்களில் மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு, புனரமைப்பு, மக்களுக்கு நம்பிக்கை அளித்தல் என மக்களோடு மக்களாக நின்று, களமாடி பேரிடரில் ஏற்பட்ட துயரங்களைத் துடைப்பதற்கு மார்க்சியம் எனும் மாமருந்து மக்களுக்கு உதவியது என்பதை காமேஸ்வரம் ஊராட்சியில் இன்றும் நம்மால் காண முடிகிறது; உணரவும் முடிகிறது.  தொகுப்பு - ஆதி.உதயகுமார்

அப்போது ‘சுனாமி’ என்ற வார்த்தைகூட தெரியாது

இதுகுறித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “ஆழிப்பேரலை தாக்குண்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் நான் அந்த காமேஸ்வரம் கிராமத்தில் இருந்தேன். மக்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றார்கள். ‘சுனாமி’ என்ற வார்த்தைகூட அப்போது அவர்களுக்கு தெரியாது. மக்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். மீட்பு பணி, நிவாரணப் பணி உள்ளிட்ட பணிகளுக்கு உதவுமாறு தோழர்களை கேட்டுக் கொண்டேன். நம்முடைய தோழர்கள் சிறப்பான களப்பணியை ஆற்றினார்கள். 

அப்போது ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்திற்கு திருக்கடையூர் அருகில் இருக்கிற பெருமாள் பேட்டை கிராமத்திற்கு சமுதாயக் கூட கட்டிடத்தையும், காமேஸ்வரம் ஊராட்சியில் ஒரு பள்ளி கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்தோம். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிமன்போஸ் அடிக்கல் நாட்டுவதற்கு வந்திருந்தார்” என்றார்.

கட்சிக்கு கடமைப்பட்டிருக்கிறோம்

கட்சியின் உதவி குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.ஏ.பி.ஆரோக்கியதாஸ் கூறுகையில், “18.9.1954 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தப் பள்ளியானது பல்வேறு காலக் கட்டங்களில் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகி வந்தது. 2004 இல் ஆழிப்பேரலை தாக்குண்டபோது பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் எங்கள் பள்ளிக்கு ரூ.10 பத்து லட்சம் தொகையை கொடுத்து பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்தது. இன்று மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஆறு ஆண்டுகளில், மூன்று கால்நடை மருத்துவர்கள், இரண்டு சித்த மருத்துவர்கள், 60 மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளையும், 40 பொறியாளர்கள், 15 வேளாண்துறை சார்ந்த படிப்புகளையும் மாணவர்கள் படித்து வருகின்றனர். நீட் தேர்வு இல்லாவிட்டால் எங்கள் மாணவர்களில் பலர் இன்று மருத்துவராகி இருப்பார்கள். நாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். வி.மாரிமுத்து, நாகைமாலி, வி.சுப்ரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் எங்கள் பள்ளிக்கு அடிக்கடி வந்து பள்ளியின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரிப்பார்கள்” என்றார்.