திருவாரூர், ஆக.6 - புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் பேரளம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், வருவாய்த்துறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பேரளம் காவல் ஆய்வாளர் எம்.மணிமாறன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், டி.வீரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், மாவட்டக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.