பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற திருபுவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க சிபிஎம் கோரிக்கை
கும்பகோணம், பிப்.26- கும்பகோணம் அருகே, உலகப் பிரசித்தி பெற்ற பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்ற திருபுவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சங்கர் தெரிவித்து இருப்பதாவது: திருபுவனத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள் திருபுவனத்தில் பேருந்து நிலைய வசதி இல்லாமல் மழை, வெயில் காலங்களில் மிகவும் அவதியுற்ற நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, திருபுவனத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன், பொருத்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, திருபுவனத்தில் பேருந்து நிலையம் அமைத்துத் தர வேண்டும் என அவ்வறிக்கையில் சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
பேராவூரணி அரசு கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கணினி அறிவியல் துறை சார்பாக “செயற்கை நுண்ணறிவு-கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் (பொ) பேராசிரியர் சி.இராணி முன்னிலை வகித்தார். செயற்கை நுண்ணறிவு-கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் வேத. கரம்சந்த் காந்தி பேசினார். கருத்தரங்கில், செயற்கை நுண்ணறிவு உருவான வரலாறு தொடங்கி, இன்றைய கணினி உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜெமினி சாட்ர்ஜிபிடி போன்றவை குறித்து பேசினார். இதில், கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் சோ.ஜமுனா வரவேற்றார். பேராசிரியர் அ. ராஜேஷ் நன்றி கூறினார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர். பிப்.26- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ், தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.28 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் போராட்டம்
பெரம்பலூர், பிப்.26- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தின் சார்பாக, பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 20 சதவிகித ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்கிட வேண்டியும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடக் கோரியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நடைபெற்றது. இதற்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பழனிவேல்ராஜா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அருண்குமார், மாவட்டத் துணை தலைவர் தாமஸ் விக்டர், மாவட்டப் பொருளாளர் கரும்பாயிரம், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் துண்டுப் பிரசுரங்கள்
திருச்சிராப்பள்ளி, பிப்.26- திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பில், மாநகரச் செயலாளரும், மண்டலக் குழு தலைவருமான மதிவாணன் தலைமையில், பொதுமக்களிடையே தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, பொன்மலை பகுதி கல்கண்டார் கோட்டை கடைவீதி மற்றும் அரியமங்கலம் பகுதி பேருந்துநிலையம், மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அப்பொழுது ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் பொன்மலை பகுதிக் கழக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம். தர்மராஜ், அரியமங்கலம் பகுதிக் கழகச் செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார், மாநகரப் பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாநகர துணைச் செயலாளர் பொன் செல்லையா, சந்திரமோகன், அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியல்
திருச்சிராப்பள்ளி, பிப்.26- நடப்பு ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை ரூ 25 லட்சமாக உயர்த்திட கோரியும் திருச்சி நீதிமன்றம் முன்பு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் மதியழகன் தலைமையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் சுகுமார் வரவேற்றார். ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வக்கீல்கள் கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பியவாறு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி, பிப்.26- திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைநாடுநர்கள், பிப்.28 வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக வேகத்தடை: மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
மன்னார்குடி, பிப்.26- மன்னார்குடி- மதுக்கூர் சாலையில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. அதற்கு எதிர் புறம் குடியிருப்பு காலனிக்குச் செல்லும் பாதை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தித் தான், அரசு கலைக் கல்லூரி, தனியார் மகளிர் கல்லூரி, இரண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்களுக்குச் செல்ல வேண்டும். காலை 8 மணியிலிருந்து 9 மணி வரை, பிற்பகல் 4 மணியிலிருந்து, ஆறு மணி வரை இச்சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அந்த சமயங்களில் பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியே வந்தால் அல்லது உள்ளே நுழைந்தால் சாலைப் போக்குவரத்து நெருக்கடி இயல்பாகவே அதிகரிக்கும். பணிமனைக்கு எதிரே வேகத்தடை இல்லாததால், மாதத்திற்கு நான்கு ஐந்து இருசக்கர விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எதிரெதிரே இரண்டு கனரக வாகனங்கள் சரி நேராக மோதி, மிகப் பெரும் விபத்து ஏற்பட்டாலொழிய நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையின் கவனத்தை விபத்துகள் ஈர்ப்பதில்லை. நெடுஞ்சாலைத்துறை சாலையின் அகலத்தை அதிகரிக்கப் போவதாக ஓராண்டு காலமாக சொல்லப்பட்டு வருகிறது. தற்காலிகமாவது, இரண்டு வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறை இனியும் தாமதம் இன்றி போக்குவரத்து கழக பணிமனை முன்பு அமைக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.