தஞ்சாவூர், அக்.30 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகாவில் உள்ள கடம்பங்குடி, ஐம்பதுமேல்நகரம். பகுதிகளில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு, விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். அப்போது, விவசாயிகள் தொடக்க வேளாண் விரிவாக்க அலுவலகம் மூலம் பயிர் காப்பீடும் செய்திருந்தனர். அந்த காலக்கட்டத்தில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை; வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி நிலவியதையடுத்து பல பகுதிகளில் பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், கடம்பங்குடி மற்றும் ஐம்பதுமேல் நகரைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பத்மநாபன், ஜனனி, அலமேலுமங்கை, சாமிநாத குணசீலன், ஜெயபால், கந்தவேல், முருகேஷ், ராஜீவ்காந்தி, பாலசுப்பிரமணியன், ராஜா, முருகானந்தம், பன்னீர்செல்வம், பொருட்செல்வி, கந்தஅரசு ஆகியோர் தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி ஆகியோர் விசாரித்து, “விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு தலா ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரமும் என 14 பேருக்கும், 16.20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு” திருவையாறு மத்திய கூட்டுறவு வங்கிக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது, விவசாயிகள் 14 பேரும் ஆஜராகி உத்தரவு நகலை பெற்றுக் கொண்டனர். அப்போது, வழக்குரைஞர்கள் ஜீவக்குமார், கீர்த்திராஜ், சுந்தரி, உமர்முக்தார், பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.