பாபநாசம், ஜூன் 13-
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் சுமார் 500 ஏக்கரில் (நன்செய்) இரு போக சாகு படி நடைபெறுகின்றது. குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் இருக்கும் காலங்களில் கூட பசுபதி கோவில் விவசாய நிலங்களில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் நடவு செய்ய முடி யாத நிலை உள்ளது. இதற்குத் தீர்வாக குடமுருட்டி ஆற்றில் பசுபதி கோவில் தலைப்பு வாய்க்கால் அருகில் தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மாத்தூர் அருகில் குடமுருட்டி ஆற்றில் தடுப்பனை கட்டுமானப் பணியை நீர்வளத்துறை மேற் கொண்டுள்ளது.
இந்த பணியை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீர் வளத்துறை பொறியாளர் அன்புச் செல்வன் திட்டம் குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கினார். ஆய்வின் போது பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஒப்பந்ததாரர் நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.
பள்ளிக்கட்டடம் திறப்பு
முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 24.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்டக் கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார ஊராட்சி சிவக் குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.