புதுக்கோட்டை, மார்ச் 5 - புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,84,044 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.94,000 மதிப்பிலான தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,000 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,06,544 மதிப்பிலான உதவி உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.